pasi-paruppu-javvarisi-payasam(பாசிபருப்பு, ஜவ்வரிசி சேர்த்து இப்படி பாயாசம் ஒருமுறை செஞ்சு பாருங்க, செம டேஸ்ட்டா இருக்கும்! அமாவாசையில் நெய்வேத்தியம் படைக்கலாம்.) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Saturday 13 November 2021

pasi-paruppu-javvarisi-payasam(பாசிபருப்பு, ஜவ்வரிசி சேர்த்து இப்படி பாயாசம் ஒருமுறை செஞ்சு பாருங்க, செம டேஸ்ட்டா இருக்கும்! அமாவாசையில் நெய்வேத்தியம் படைக்கலாம்.)

pasi-paruppu-javvarisi-payasam

பாசிபருப்பு, ஜவ்வரிசி சேர்த்து இப்படி பாயாசம் ஒருமுறை செஞ்சு பாருங்க, செம டேஸ்ட்டா இருக்கும்! அமாவாசையில் நெய்வேத்தியம் படைக்கலாம்.


ஜவ்வரிசி பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் என்று விதவிதமான பாயாசம் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் ஜவ்வரிசியுடன், பாசிப்பருப்பு சேர்த்து செய்யப்படும் இந்த பாயாசம் வித்தியாசமான சுவையுடன், அற்புதமான தெய்வீக மணமுடன் இருக்கும். இதனை அமாவாசை தினங்களில் நைவேத்தியம் படைக்க பயன்படுத்தலாம். மேலும் முக்கிய விரத தினங்களில் பாயாசம் செய்ய இந்த பாயாசம் சிறந்த தேர்வாக இருக்கும். ரொம்பவே சுலபமாக எல்லோரும் செய்யக்கூடிய வகையிலான இந்த பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் நாமும் எப்படி செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

பாசிபருப்பு ஜவ்வரிசி பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்: பாசி பருப்பு – அரை கப், சிறு ஜவ்வரிசி – கால் கப், தண்ணீர் – 3 கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – கால் கப், முந்திரிப் பருப்பு – 10, திராட்சை – 2 ஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் – ஒரு கப், ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்.

பாசிபருப்பு ஜவ்வரிசி பாயாசம் செய்முறை விளக்கம்: அரை கப் அளவிற்கு பாசிப்பருப்பை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடம் நன்கு ஊறிய பிறகு ஜவ்வரிசி கால் கப் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய ஜவ்வரிசி, சிறிய ஜவ்வரிசி என்று அளவில் வித்தியாசப்படும். அதில் சிறிய அளவிலான ஜவ்வரிசி எடுத்துக் கொள்வது நன்றாக இருக்கும். அதனை கழுவ வேண்டிய அவசியம் இல்லை, அப்படியே இதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் குக்கரில் சேர்த்து அடுப்பை பற்ற வைத்து மூன்று கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். 5 விசில் வரை மூடி போட்டு நன்கு குழைய வேக விடவும். இவை நன்கு வெந்ததும் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வையுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை வெல்லப்பாகு காய்ச்சி கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து நெய் தேவையான அளவிற்கு ஊற்றி காய விடுங்கள். நெய் நன்கு காய்ந்ததும் அதில் முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வறுத்து எடுங்கள், பின் காய்ந்த திராட்சைகளையும் இதே போல வறுத்து எடுங்கள். வாணலியில் இருக்கும் நெய்யில் நீங்கள் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் ஜவ்வரிசி கலவையை ஊற்றிக் கொள்ளுங்கள். அதனுடன் நன்கு காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்கு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் காய்ச்சிய வெல்லப்பாகை நன்கு ஆற வைத்த பின்பு ஒரு வடிகட்டியை வைத்து இப்போது வடித்து சேருங்கள். அப்போது தான் அதில் இருக்கும் தூசு, தும்புகள் நீங்கும். கொதி வந்ததும் அதில் கால் டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து விடவும். பின்னர் நன்கு கொதித்ததும் நெய்யில் வறுத்த தேங்காய், முந்திரி, திராட்சைகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு கலந்து விட்டு சுடச்சுட பரிமாற வேண்டியது தான். ரொம்பவே சுவையான இந்த பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடுங்கள்.

No comments:

Post a Comment