சிம்பிளான... தக்காளி குழம்பு - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Friday 20 August 2021

சிம்பிளான... தக்காளி குழம்பு

Thakkali Kuzhambu Recipe In Tamil

சிம்பிளான... தக்காளி குழம்பு

இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் தக்காளி குழம்பு செய்யுங்கள். இது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவில் சுவையாகவும், அதிக காரம் இல்லாமலும் இருக்கும்.

உங்களுக்கு தக்காளி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு

* சாம்பார் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...
* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

* பூண்டு - 4 பல்

* சின்ன வெங்காயம் - 20 (தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்)

அரைப்பதற்கு...

* தக்காளி - 5

* பட்டை - 1/2 இன்ச்

* கிராம்பு - 2

* பொட்டுக்கடலை - 1 1/2 டேபிள் ஸ்பூன்

* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் தக்காளியை எண்ணெயில் போட்டு, நன்கு தக்காளியின் தோல் சுருங்கும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய தக்காளியுடன், தேங்காய், பொட்டுக்கடலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் சாம்பார் பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, தேவையான அளவு நீரை சேர்த்து நன்கு பச்சை வாசனைப் போக கொதிக்க வைத்து, இறுதியாக அதில் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான தக்காளி குழம்பு தயார்.


குறிப்பு:

* சாம்பார் பவுடர் இல்லாதவர்கள் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.

* இந்த குழம்பு தயாரிப்பதற்கு நாட்டுத் தக்காளி மற்றும் பெங்களூர் தக்காளி இரண்டையும் கலந்தும் பயன்படுத்தலாம்.

* தக்காளியை நன்கு வதக்கிய பின்னரே அரைக்க வேண்டும். இல்லாவிட்டால் கிரேவியில் பச்சை வாசனை இருக்கும்.

* இந்த தக்காளி குழம்பை 3 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். குறிப்பாக வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திக்கும் போது செய்ய ஏற்ற குழம்பு.

No comments:

Post a Comment