panner cocunt gravy (பன்னீர் தேங்காய் கிரேவி) - COOKING TIPS AND COOKING STYLE

We providing Latest Cooking tips and cooking notes for free

Monday 16 August 2021

panner cocunt gravy (பன்னீர் தேங்காய் கிரேவி)



பன்னீர் தேங்காய் கிரேவி

இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் ஒரு அற்புதமான பன்னீர் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெசிபியின் பெயர் பன்னீர் தேங்காய் கிரேவி. இது சப்பாத்திக்கு மட்டுமின்றி, புரோட்டா, புல்கா, நாண் ஆகியவற்றுடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் தேங்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் தேங்காய் கிரேவியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

* கரம் மசாலா - 1 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* தண்ணீர் - 3/4 கப்

* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கிரேவி மசாலாவிற்கு...

* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் - 4

* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - 1 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் - 1 (நறுக்கியது)

* துருவிய தேங்காய் - 1/4 கப்

செய்முறை:

* முதலில் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி விதைகள், சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குளிர வைக்க வேண்டும்.


* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மசாலாப் பொருட்களை சேர்த்து அரைத்ததும், அத்துடன் வதக்கிய தேங்காய் வெங்காய கலவையையும் சேர்த்து, சிறிது நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அரைத்த மசாலாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் பன்னீர் துண்டுகளைப் போட்டு அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள வெண்ணெயை சேர்த்து உருகியதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* தக்காளி நன்கு வதங்கியதும், கரண்டியால் தக்காளியை நசுக்கி விட்டு, பின் கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். தேவைப்பட்டால், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீரை சேர்த்துக் கொள்ளலாம்.

* கிரேவி நன்கு கொதித்ததும், அதன் மேல் சிறிது உலர்ந்த வெந்தய கீரையை கையால் நசுக்கி போட்டு, கிளறி இறக்கினால், சுவையான பன்னீர் தேங்காய் கிரேவி தயார்.

No comments:

Post a Comment